அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி–மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினம் ஹிரோசிமாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பான் கி– மூன் ஜப்பான் சென்றுள்ளார். நாகசாகி நகரில் உள்ள அணு குண்டு தாக்குதல் நினைவு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 1945-ம் ஆண்டு தாக்குதலில் உயிர் தப்பியவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், உலகில் எந்தப் பகுதியிலும் மீண்டும் அணுகுண்டு தாக்குதல் நடைபெறக்கூடாது, அதற்கு அணு ஆயுதங்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றார். உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.